Monday 28 September 2015

தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம்  நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015

                             வகை 4 புதுக் கவிதைப் போட்டி

                                  ஏழையின் மனம்

கண்ணீர் வெள்ளத்தில் 
   கரைந்த மனம்
       கருகிக்கொண்டே இருந்தது!

வாசல்கதவைத் திறந்து
   வசந்தகாலத்தை எதிர்நோக்கி
       வருத்தத்தோடு காத்திருந்தேன்!

இருண்ட மனதின்
   இந்நிலை என்றுதான்
      இல்லாமல் இருக்குமோ!

பணம் எந்நாளும்
    பகைத்துக் கொண்டு எங்கேயோ
       படுத்துக் கொண்டது!

கால்கள் நடந்து
   காயங்களே மிச்சம்
     காணவில்லை  வசந்தம்!

குடிசையில் தூங்கி
   குமுறி அழுகின்றது
      குரங்கு மனம்

அகப்பையில் சிறிதும்
    அகப்படவில்லை உணவு
        அவசரபடவில்லை கைகள்!

படுக்கையில் இருந்து
    பல்லக்கில் இருப்பதாக
        பகல்கனவு காண்கிறேன்!

பாழாய்போன வாழ்வில்
    பாம்பாய் சுற்றுகிறது
       பாவங்களின் பரிசு

நெஞ்சத்தில் தீ
    நெருங்கியது மரணம்
        நெட்டுயிராய் நான்

இன்பம் என்றுமே
    இயலாத ஒன்றென
        இருந்துவிடுகிறேன் இனி


இப்படைப்பு எனது சொந்த படைப்பே என உறுதி கூறுகிறேன்

தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம்  நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015-க்காகவே எழுதப்பட்டது.

இதற்கு முன் வெளியான படைப்பு அல்லமுடிவு வெளி வரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன் -                                     
                                         ம. கண்ணன், திருச்செங்கோடு






2 comments:

  1. கண்ணன் தரும்கவிதை கற்கண்டு போலினிக்க
    என்ன இனிநான் எழுதுவதோ? - வண்ணக்
    கவிதை வளர்க்கின்ற கைதொடர்க இந்தப்
    புவிநிறைக உங்கள் புகழ்.



    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் கண்ணன்.!

    நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete